எள் பயிரின் இலைச்சுருள் நோய்

Antigastra catalaunalis

பூச்சி

சுருக்கமாக

  • இளம் கம்பளிப்புழுக்கள் இலைகளின் மேற்பகுதியை வலை போல ஒன்றாகப் பின்னி, உள்ளே சென்று உணவை உட்கொள்ளும்.
  • இலைகள் முறுக்கிக் கொண்டும், சுருண்டுக் கொண்டும், மெல்லிய பட்டு நூல்களால் பிணைக்கப்பட்டும் காணப்படும்.
  • பின்னர், கம்பளிப்புழுக்கள் இளந்தளிர்கள் மற்றும் வளரும் காய்களுக்குள் துளையிடும்.
  • வலை பின்னப்பட்ட இலைகளிலும், காய்களில் உள்ள துளைகளுக்கு அருகிலும் கருமையான, மணல் போன்ற கழிவுகள் தென்படும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களின் நுனிகள் வாடியும், விதைகளில் துளைகளும் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

0 பயிர்கள்

அறிகுறிகள்

ஆரம்ப கட்டங்களில், இளம் கம்பளிப்புழுக்கள் மேல் இலைகளை மெல்லிய பட்டு நூலால் ஒன்றாகப் பின்னுவதை நீங்கள் கவனிப்பீர்கள். இவை இந்தப் பின்னப்பட்ட இலைக் கொத்துகளுக்குள் வாழ்ந்து உண்கின்றன, இதனால் இலைகள் முறுக்கியது போலவும் சிதைந்தது போலவும் தோற்றமளிக்கின்றன. கம்பளிப்புழுக்கள் வளரும்போது, ​​இவை இலைகளிலிருந்து தளிர்களின் நுனியில் உள்ள மென்மையான மற்றும் மிருதுவான வளர்ச்சியுடைய பகுதிகளுக்கு நகர்கின்றன. இவை இந்தத் தண்டுகளுக்குள் துளையிடுவதால், தாவரத்தின் நுனிகள் வாடி உலர்ந்து போகும். பருவத்தின் பிற்பகுதியில், இவை வளரும் காய்களுக்குள் துளையிட்டு உள்ளே இருக்கும் விதைகளை உண்ணும். இவற்றின் இருப்புக்கான தெளிவான அறிகுறி, வலைகளில் அல்லது காய்களின் நுழைவாயில்களைச் சுற்றி ஒட்டிக்கொண்டிருக்கும் கருமையான, தானியம் போன்ற கழிவுகள் (ஃபிராஸ்) ஆகும். கடுமையான தாக்குதல்களின்போது, ​​தாவரத்தின் முழு மேற்பகுதியும் பட்டு நூலும் காய்ந்த இலைகளும் நிறைந்த ஒரு சிக்கலான குவியலாக மாறிவிடும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிகளில், வேப்ப விதைச் சாறு (NSKE) அல்லது வேப்ப எண்ணெய் போன்ற தாவரச் சாறுகளைப் பயன்படுத்துவதும் அடங்கும். இவை இயற்கையான விரட்டியாகச் செயல்பட்டு, கம்பளிப்புழுக்கள் உண்பதைத் தடுக்கின்றன. பியூவேரியா பாஸியானா அல்லது மெட்டார்ஹிலியம் அனிசோப்லியே போன்ற நன்மைப் பயக்கும் பூஞ்சைகளைக் கொண்ட தெளிப்புகளையும் நீங்கள் பயன்படுத்தலாம். இவை இயற்கையாகவே முட்டைப்புழுக்களைத் தாக்கி அழிக்கின்றன. சிலந்திகள் மற்றும் கொன்றுண்ணும் குளவிகள் போன்ற இயல் பகையினங்களை ஊக்குவிப்பதும் உதவியாக இருக்கும். இரவில் முதிர்ந்த அந்துப்பூச்சிகளைப் பிடிக்க வயலில் ஒளிப் பொறிகளை அமைக்கலாம். இது பயிரில் இடப்படும் முட்டைகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவியாக இருக்கும்.

இரசாயன கட்டுப்பாடு

பொதுவான ரசாயன மேலாண்மையானது, இளம் கம்பளிப்புழுக்கள் தண்டுகளிலோ அல்லது காய்களிலோ ஆழமாகத் துளையிடுவதற்கு முன்பே இவற்றைச் சென்றடைவதில் கவனம் செலுத்துகிறது. இவை தாவரத்திற்குள் சென்று மறைந்தவுடன், சிகிச்சைகள் பலனளிப்பது மிகவும் கடினமாகிவிடும். முதல் பட்டு வலைகள் தோன்றுவதைக் கண்டவுடனேயே இலைகளுக்குச் சிகிச்சைகளை மேற்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நேரம் மிகவும் முக்கியமானது; கம்பளிப்புழுக்கள் மேற்பரப்பில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வாய்ப்புள்ள அதிகாலை அல்லது மாலை நேரங்களில் மருந்துகளைப் பயன்படுத்துவது பெரும்பாலும் அதிக பலனைத் தரும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோயப்பூச்சி சிறிய, பழுப்பு-ஆரஞ்சு நிற அந்துப்பூச்சியாகும், இது இரவில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். பெண் அந்துப்பூச்சி, இலைகளின் அடிப்பகுதி, பூ மொட்டுகள் மற்றும் இளம் காய்களில் சிறிய, பச்சை நிற முட்டைகளை இடும். முட்டையிலிருந்து வெளிவரும் கம்பளிப்புழுக்கள் வெளிர் பச்சை நிறத்தில் சிறிய கருப்புப் புள்ளிகளுடன் காணப்படும். அவை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்; தொந்தரவு செய்யப்பட்டால், இவை பின்னோக்கி நெளிந்து ஒரு பட்டு நூலில் தரையில் விழும். இந்தப் பூச்சி வெப்பமான காலநிலையில், குறிப்பாக வறண்ட காலங்களைத் தொடர்ந்து லேசான மழை பெய்யும்போது செழித்து வளரும். மண்ணில் அதிக அளவு நைட்ரஜன் இருப்பது, எள் செடிகள் மென்மையாகவும் மிருதுவாகவும் வளர ஊக்குவிப்பதால், இச்சூழல் செடிகள் தாக்கப்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. அத்துடன் இந்த மென்மையான செடிகளை இளம் கம்பளிப்புழுக்கள் உண்பதும் துளைப்பதும் எளிதாகிறது.


தடுப்பு முறைகள்

  • நோய்ப்பூச்சிகளின் எண்ணிக்கை பெருகும் முன் செடிகள் முதிர்ச்சியடைவதற்காக, பருவத்தின் தொடக்கத்திலேயே எள்ளை விதைக்கவும்.
  • துவரை அல்லது பாசிப்பயறு போன்ற பிற பயிர்களுடன் எள்ளை ஊடுபயிர் செய்யவும்.
  • செடிகள் அதிகப்படியாக மென்மையாக வளர்வதைத் தடுக்க, அதிகப்படியான நைட்ரஜன் உரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • பூச்சி தாக்கிய செடியின் பாகங்கள் மற்றும் வலை பின்னிய இலைகளைக் கண்டவுடன் அவற்றை அகற்றி அழிக்கவும்.
  • அறுவடைக்குப் பிறகு, ஓய்வெடுக்கும் ஏதேனும் கம்பளிப்புழுக்கள் அல்லது கூட்டுப்புழுக்களைக் கொல்வதற்காக, பழைய பயிர்க் கழிவுகளைச் சேகரித்து எரிக்கவும்.
  • கம்பளிப்புழுக்களை உண்ணும் சிலந்திகள் மற்றும் கொன்றுண்ணும் குளவிகள் போன்ற இயல் பகையினங்களைப் பாதுகாக்கவும்.
  • வாரத்திற்கு ஒரு முறை வயலை ஆய்வு செய்து, வலை பின்னியதற்கான அறிகுறிகள் தென்படுகிறதா என மேல் இலைகள் மற்றும் பூ மொட்டுகளில் கவனம் செலுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க