கருப்பு கம்பளிப்புழு

Hyposidra talaca

பூச்சி

சுருக்கமாக

  • மெல்லிய, ஒளி ஊடுருவக்கூடிய இலைச் சேதம் காணப்படும்.
  • புதரின் வெளிப்புறத்திலிருந்து மையப்பகுதியை நோக்கி உண்ணும் சேதங்கள் தென்படும்.
  • முழுமையான இலை உதிர்வு, புதர்களை மொட்டையாகவும் கருகியது போலவும் தோற்றமளிக்கச் செய்யும்.
  • கோடுகள் போலத் தோன்றும் வெள்ளைப் புள்ளிகளுடன் கூடிய கருப்பு நிற முட்டைப் புழுக்கள் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

5 பயிர்கள்

அறிகுறிகள்

முதலில், சிறிய முட்டைப்புழுக்கள் இலைகளின் மென்மையான பகுதியைத் தின்று, அவற்றை மெல்லிய, ஒளி ஊடுருவக்கூடிய படலம் போல ஆக்கும். அவை வளருகையில், முட்டைப்​​புழுக்கள் தேயிலைச் செடியின் வெளிப்புறத்திலிருந்து தொடங்கி மையப் பகுதியை நோக்கி நகர்ந்து, முழு இலைகளையும் தின்றுவிடும். அவை அதிக எண்ணிக்கையில் இருந்தால், தேயிலைச் செடிகளில் உள்ள எல்லா இலைகளையும் முற்றிலுமாக அகற்றிவிடும். இதனால், செடிகள் மொட்டையாகவும் கருகியது போலவும் தோற்றமளிக்கும். இலைகள் தொடர்ந்து உண்ணப்படும்போது, ​​தேயிலைச் செடி பலவீனமடைந்து, அறுவடை செய்யப்படும் தேயிலையின் தரம் குறைந்துவிடும், மேலும் செடிகளானவை மற்ற நோய்ப்பூச்சிகள் மற்றும் நோய்களால் எளிதில் தாக்கப்படும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

கருப்பு கம்பளிப்புழுவின் பல இயற்கை எதிரிகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை (IPM) திட்டத்தில் பயன்படுத்தலாம். ஒட்டுண்ணி குளவிகள் (எ.கா. கோட்டேசியா ரூஃபிக்ரஸ்) கம்பளிப்புழுவின் உள்ளே முட்டையிடுகின்றன. இலையுதிர்காலத்தின் பிற்பகுதியிலும் வசந்த காலத்திலும் இவற்றின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும், அந்த நேரத்தில்தான் கம்பளிப்புழுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இரைகொல்லி துர்நாற்றப் பூச்சிகள் (எ.கா. ஈயோகாந்தெகோனா ஃபர்செல்லாட்டா) கம்பளிப்புழுவின் முட்டைப்புழுக்களை உண்கின்றன, மேலும் அவை பருவம் முழுவதும் சுறுசுறுப்பாக இருந்தாலும், ஜூன் முதல் செப்டம்பர் வரை மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றன. இந்த இயற்கை எதிரிகளை அதிக எண்ணிக்கையில் வளர்த்து வயல்களில் விடலாம். மேலும், ஹைபோசிட்ரா தலக்கா நியூக்ளியோபாலிஹெட்ரோவைரஸ் (ஹைட்டாNPV) எனப்படும் ஒரு வைரஸ், நம்பிக்கைக்குரிய இயற்கை பூச்சிக்கொல்லியாகத் திகழுகிறது. ஒரு ஹெக்டேருக்கு 800–1000 மில்லி பயன்படுத்துவது கம்பளிப்புழு எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்தது என்று கள சோதனைகள் காட்டின. ஒரு IPM திட்டத்தில் இரசாயன பூச்சிக்கொல்லிகளுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மாற்றாக ஹைட்டாNPV கருதப்படுகிறது.

இரசாயன கட்டுப்பாடு

கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் உயிரியல் சிகிச்சைகளையும் உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். வரலாற்று ரீதியாக, கருப்பு கம்பளிப்புழுவின் கட்டுப்பாடு பெரும்பாலும் செயற்கை பூச்சிக்கொல்லிகளையே பெரிதும் சார்ந்திருந்தது; இருப்பினும், முக்கிய தேயிலை விளையும் பிராந்தியங்களில் பல இரசாயன வகைகளுக்கு உண்டாகும் எதிர்ப்புத்திறன் ஒரு தீவிரமான மற்றும் வளர்ந்து வரும் கவலையாக உள்ளது. எதிர்ப்புத்திறன் உருவாவதைத் தாமதப்படுத்த பூச்சிக்கொல்லி வகைகளை சுழற்சி முறையில் பயன்படுத்துங்கள், மேலும் எப்போதும் லேபிளில் உள்ள வழிமுறைகளின்படி பயன்படுத்துங்கள்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்தச் சேதமானது, கருப்பு அங்குலப் புழு என்றும் அழைக்கப்படும் ஹைபோசிட்ரா தலக்கா (Hyposidra talaca) என்ற கருப்பு கம்பளிப்புழு அந்துப்பூச்சியின் முட்டைப்புழுக்களால் ஏற்படுகிறது. முதிர்ந்த அந்துப்பூச்சி ஒரு காய்ந்த இலையைப் போல தோற்றமளிக்கும், இந்தத் தோற்றத்தை வைத்து அது தன்னை மறைத்துக் கொள்ளும். பெண் அந்துப்பூச்சிகள் தேயிலைத் தோட்டங்களில் உள்ள நிழல் தரும் மரங்களின் தளர்வான மரப்பட்டை, பாசி அல்லது வேர்களின் கீழ் பெரிய முட்டைக் குவியல்களை (சுமார் 250) இடும். இவை தேயிலைச் செடிகளில் நேரடியாக முட்டையிடுவதில்லை. முட்டைகள் பொரிக்கப்படும்போது, ​​வெள்ளை வளையங்களை உருவாக்கும் புள்ளிகளுடன் கூடிய சிறிய கருப்பு முட்டைப்புழுக்கள் நிழல் தரும் மரங்களிலிருந்து கீழே விழுந்து தேயிலை இலைகளை உண்ணத் தொடங்குகின்றன. இந்தப் பூச்சிக்கு ஒரு வருடத்தில் பல தலைமுறைகள் (6 முதல் 8 வரை) உள்ளன, அதனால்தான் இது எப்போதும் தேயிலைச் செடிகளில் காணப்படுகின்றன. வெப்பமான காலநிலையிலும், நிழல் தரும் மரங்கள் இருக்கும்போதும், பூச்சியின் இயற்கை எதிரிகளைக் கொல்லும் அதிகப்படியான செயற்கை பூச்சிக்கொல்லித் தெளிப்புகள் பயன்படுத்தப்படும்போதும் இதன் தாக்குதல்கள் அதிகமாக நிகழ்கின்றன. இமயமலைக்கு அருகிலுள்ள தேயிலை விளையும் பகுதிகளில் நிகழும் காலநிலை மாற்றமும் அடிக்கடி தாக்குதல்கள் ஏற்படக் காரணமாகிறது.


தடுப்பு முறைகள்

  • தேயிலைச் செடிகள் மற்றும் நிழல் தரும் மரங்களின் பட்டைகளில் முட்டைப்புழுக்கள் உண்பதற்கான சுவடுகள் அல்லது முட்டைக் குவியல்கள் போன்ற ஆரம்ப அறிகுறிகள் தென்படுகிறதா எனத் தவறாமல் கண்காணிக்கவும்.
  • நிழல் தரும் மர வகைகளை கவனமாகத் தேர்ந்தெடுக்கவும்.
  • மிகவும் உயரமான நிழல் தரும் மரங்களைத் தவிர்க்கவும், ஏனெனில் மரத்தின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க முட்டையிடுவது அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  • பண்பாடு, இயந்திரவியல், உயிரியல் மற்றும் இரசாயன முறைகளை ஒருங்கிணைக்கும் ஒரு முழுமையான பூச்சி மேலாண்மை (IPM) அணுகுமுறையைச் செயல்படுத்தவும்.
  • தோட்டச் சூழல் அமைப்பில் உள்ள இயற்கை எதிரிகளின் எண்ணிக்கையைப் பாதுகாக்க, பரந்த வீச்சுடைய பூச்சிக்கொல்லிகளின் தேவையற்ற பயன்பாட்டைக் குறைக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க