லிச்சிப் பழ பச்சாடை பூச்சி

Tessaratoma papillosa

பூச்சி

சுருக்கமாக

  • பூக்களும் இளம் பழங்களும் முதிர்ச்சி அடைவதற்கு முன்பே உதிர்ந்துவிடும்.
  • இளம் கிளைகள் வாடி, நுனியில் கருப்பாக மாறிவிடும்.
  • முதிர்ந்த பச்சாடை பூச்சி பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில், எடுப்பான சிவப்புக் கண்களுடன் காணப்படும்.
  • தொந்தரவு செய்யப்படும்போது, ​​இந்தப் பூச்சிகள் எரியும் திரவத்தைத் தெளிக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

0 பயிர்கள்

அறிகுறிகள்

பூ மொட்டுகள், தளிர்கள், பூங்கொத்துகள் மற்றும் இளம் பழங்களில் அறிகுறிகள் தென்படலாம். இளம் சிறு கிளைகள் மற்றும் மென்மையான கொப்புகளின் நுனிகளில் இருந்து வாடத் தொடங்கி, பின்னர் அவை கருப்பாக மாறும் அறிகுறிகள் தென்படும். பூக்கள் மற்றும் பழங்கள் வாடிச் சுருங்குவதே முதன்மை அறிகுறிகளாகும். பழங்களில் தனித்துவமான கருப்புப் புள்ளிகள் அல்லது தோல் கருமையாதல் போன்ற பாதிப்புகள் உருவாகும். இதனால் பழங்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன்பே உதிர்ந்துவிடக்கூடும், இதன் விளைவாக மரத்தின் பழ உற்பத்தி குறையும். அதிக பூச்சி அடர்த்தியால் கிளைகள் மற்றும் இலைகளின் வளர்ச்சி குன்றக்கூடும். கடுமையான பாதிப்புகளில், மரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் தடைபடலாம்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இயற்கை எதிரிகள் இந்தப் பூச்சியை எதிர்த்துப் போராட உதவும். அவை முட்டைகளைத் தாக்கி, பெரும் தாக்குதல் ஏற்படுவதைத் தடுக்கும். தாக்க வாய்ப்புள்ள உயிரினங்களின் பட்டியலைப் பெற, உள்ளூர் அதிகாரிகளையோ அல்லது வேளாண் ஆலோசகரையோ அணுகவும்.

இரசாயன கட்டுப்பாடு

சிறந்த பலன்களுக்கு, பூக்கள் பூக்கும் ஆரம்பக் கட்டத்தில் தெளிக்கவும். முழுமையான பரவலுக்கு, உயர் அழுத்தத்தில், அதிக பாய்ச்சல் கொண்ட தெளிப்பான்களைப் பயன்படுத்தவும். பூச்சிகள் மறைந்திருக்கும் அடர்த்தியான கிளைகள் மற்றும் இலைகளைக் குறிவைக்கவும். பூச்சிகளின் செயல்பாடு குறைவாக இருக்கும்போது (குளிர்ந்த வெப்பநிலை) தெளிக்கவும். கடுமையான பாதிப்புகளுக்கு பலமுறை சிகிச்சை தேவைப்படலாம். உள்ளூர் அரசாங்கங்கள் கட்டுப்பாட்டுத் திட்டங்களை ஒருங்கிணைக்கின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

லிச்சி பழ பச்சாடைப் பூச்சி (டெஸ்ஸராடோமா பாப்பிலோசா) என்பது தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட ஓர் ஊடுறுவல் பூச்சியாகும். இப்பூச்சி ஆசியா முழுவதும் வேகமாகப் பரவி, இப்போது உலகெங்கிலும் புதிய பிராந்தியங்களில் நிலைபெற்று வருகிறது. முதிர்ந்த பச்சாடைப் பூச்சிகள் பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்துடன் ஒரு தனித்துவமான கேடய வடிவத்தைக் கொண்டுள்ளன. இளம் பூச்சிகள் குறிப்பாகக் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும் - அவற்றின் உடல்கள் முழுவதும் வெள்ளைக் கோடுகளுடன் கூடிய பிரகாசமான சிவப்பு நிறத்தில் இருக்கும். முட்டைக் கொத்துகளும் தனித்துவமானவை; அவை நேர்த்தியான வரிசைகளில் அடுக்கப்பட்டு இருக்கும்; சரியாக 14 மரகதப் பச்சை அல்லது இளஞ்சிவப்பு நிற முட்டைகளைக் கொண்டிருக்கும். முதிர்ந்த பூச்சிகளும் இளம் பூச்சிகளும், லிச்சி மற்றும் லோங்கன் மரங்களின் மென்மையான மொட்டுகள், தளிர்கள், பூத்தண்டுகள் மற்றும் இளம் பழங்களை, அவற்றின் துளைத்து உறிஞ்சும் வாய் உறுப்புகளைப் பயன்படுத்தி உணவாக உட்கொள்ளும். இவற்றின் உண்ணும் காயங்கள், பூஞ்சை நோய்களை ஈர்த்து, தாவரத்திற்கு மேலும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. லிச்சி பழ பச்சாடைப் பூச்சி மரங்களுக்குத் தனித்துவமான சேதத்தை ஏற்படுத்துவதோடு, மனித ஆரோக்கியத்திற்கும் கடுமையான அபாயங்களை விளைவிக்கிறது. தொந்தரவு செய்யப்படும்போது அல்லது அச்சுறுத்தப்படும்போது, ​​இவை அரிக்கும் தன்மையுள்ள, துர்நாற்றம் வீசும் ஒரு திரவத்தைத் தெளிக்கின்றன. இது தோலில் பட்டால் உடனடியாக எரிச்சல் உணர்வை ஏற்படுத்துவதோடு, வலிமிகுந்த புண்களுக்கும் வழிவகுக்கும். கண்களில் பட்டால் பார்வை இழப்பு ஏற்படலாம். இப்பூச்சியின் திரவம் சருமத்தில் பட்டால், பாதிக்கப்பட்ட பகுதியை உடனடியாக சுத்தமான நீரால் கழுவவும், கடுமையான எரிச்சல் தொடர்ந்தால் மருத்துவரை அணுகவும்.


தடுப்பு முறைகள்

  • பூச்சிகளுக்கு அருகில் வேலை செய்யும்போது பாதுகாப்பு ஆடைகளை அணியுங்கள்.
  • ஏறும் பூச்சிகளைப் பிடிக்க, மரத்தின் அடிப்பகுதியைச் சுற்றி ஒட்டும் பசை வட்டங்களைப் பயன்படுத்துங்கள்.
  • முட்டைகள், இளம் பூச்சிகள் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் எதுவும் தென்படுகின்றனவா என வாரந்தோறும் மரங்களைக் கண்காணிக்கவும்.
  • முட்டைகள் உள்ள தாவர இலைகளை உடனடியாக வெட்டி சேகரிக்கவும்.
  • பூச்சி தாக்கப்பட்ட கிளைகளை அகற்றவும்.
  • பூச்சிகள் இறந்தது போல் நடித்து விழும்படி கிளைகளைத் தட்டி, அவற்றை கருவிகளைக் கொண்டு சேகரிக்கவும்.
  • புதிய பூச்சித் தாக்குதல்கள் குறித்து வேளாண் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க